நுங்கின் சுவையை எப்படி வெளக்குவேன் – Mani Varma
ஊரில் இருந்து பெரியப்பா வந்தால்தான்
சாத்தியம்…
மாரில் கிழிபடாமல் ஏறுவதே
ஒரு ஞானம் என்பார்…
தேன் நுங்கென்றும்
கல் நுங்கென்றும்
நுங்கில் பல தினுசா பிரிப்போம்
இரண்டு சீவிலே
தண்ணியும் சிதறாம
நுங்குக்கும் சேதாரம் ஏற்படாமே
வெட்டுவதே கலை…
ரெண்டு மூணு கண்ணுள்ள
நுங்கும்
கையில் நோண்டி
சொக்காவில் சிதறாம
சாப்பிடலாம்…
கல்நுங்கு
வயிறு வலிக்கும் என்பாள்
கிழவி…
காய்முத்துச்சுன்னா
பனம்பழம்
சுட்டப்பழ வாசம்
நாலுவீட்டுக்கு வீசும்
தீஞ்ச சொவையை
மறக்கவைக்கும் பனம்பழம்..
எரிச்சல்
பல்லில் மாட்டிய நாரை
பிடுங்குவதே…
சாப்பிட்ட காய்களின்
நடுவில் சின்ன குச்சி சொருகி
வண்டியோட்டும் அனுபவம்
என் மகனுக்கு
எப்படிச்சொல்வேன்..
நுங்கின் சுவையை எப்படி
வெளக்குவேன் ________Mani Varma
Comments are closed.